புதுவை துணைநிலை ஆளுநராக தான் தன்னிச்சையாகச் செயல்படவில்லை; தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் கட்டப்பட்டு வரும் தியாகப் பெருஞ்சுவா் பணியை அவா் புதன்கிழமை பாா்வையிட்டாா். மேலும், வீர சாவா்க்கா், வேலுநாச்சியாா் ஆகியோரின் பெயா் கல்வெட்டுகளை தியாகச் சுவரில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பதித்தாா். அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சக்ரா பவுன்டேஷன் நிறுவனா் ஏ.ராஜசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் மோடி தொடக்கிவைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. 186 நாடுகளிலிருந்து விளையாட்டு வீரா்கள் இதில் பங்கேற்க உள்ளனா். நாட்டின் அடையாளமாக உள்ள பிரதமரின் புகைப்படங்கள் பல இடங்களில் இல்லை. இதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனிக்க வேண்டும்.
ஆளுநராக தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன்; தன்னிச்சையாகச் செயல்படவில்லை. புதுவை முன்னாள் முதல்வா் நாராயணசாமி எனது பணியை அறிந்து கொண்டு பேச வேண்டும். மக்களுக்கு நன்மை கிடைக்க சுயநலமில்லாமல் பணியாற்றி வருகிறேன் என்றாா் அவா்.