புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் ஆலய பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பிகை ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடியேற்ற உற்சவம் வெகு விமர்சியாக தொடங்கியது.
முன்னதாக பஞ்சமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திக்கு சிறப்பு மின் அலங்காரத்துடன் வீதிஉலா உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து பிரம்மோற்சவ கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் விழா கொடி ஏற்றப்பட்டது.
உற்சவத்தில் சிறப்பு அழைப்பாளராக எதிர்கட்சி தலைவர் மற்றும் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் சிவா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இரண்டாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழா ஏற்பாடுகளை சேடர்குல மரபினர்கள், ஆலய சிறப்பு அலுவலர் திருவரசன் , சிவாச்சாரியார்கள் , சிவனடியார்கள், ஆலய ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.