புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்து 16 இடங்களில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
மத்திய பாஜக அரசு ராணுவத்தில் தற்காலிகமாக ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வகையில், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து சத்தியாகிரக போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மிஷின் வீதி சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி, எம்.பி. வெ. வைத்திலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதையும் படிக்க: ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...
மாநில நிர்வாகிகள் பி.கே,தேவதாஸ், சூசைராஜ், திருமுருகன், ஜெரால்ட் உள்ளிட்ட நிர்வாகிகள், காங்கிரஸார் திரளாக கலந்து கொண்டனர். இந்த சத்தியாகிரக போராட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள நாடு முழுவதும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு அளிக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், ராணுவத்தில் தனியார்மயத்தை முயற்சிக்கும் பாஜக அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதேபோல் புதுச்சேரி முழுவதும் 16 இடங்களில் காங்கிரஸ் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.