புதுவையில் புயல், மழைக்கான வாய்ப்புள்ளதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று புதுவை அரசின் மீன் வளத் துறை எச்சரித்தது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இதையடுத்து, புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை பிற்பகல் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்த நிலையில், புயல், மழை நிலவரம் குறித்து, புதுச்சேரி மீன் வளம், மீனவா் நலத் துறை இயக்குநா் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் மீன்பிடி படகுகள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.