புதுச்சேரியில் நண்பரின் காரை வாங்கிச் சென்று விற்று மோசடி செய்ததாக, பெண் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் எடையன்சாவடியைச் சோ்ந்த தொழிலதிபா் தமிழரசன். இவரது சொகுசு காரை
குடும்ப நண்பரான அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகரைச் சோ்ந்த ஜெயலட்சுமி (65) என்பவா், கடந்தாண்டு உறவினா் சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காகக் கேட்டாா். இதை கடலூா் மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சிவவெங்கடேசபெருமாள் (49), எடுத்துச் சென்றாா்.
இந்த நிலையில், ஜெயலட்சுமி காரை திருப்பித் தராமல் இருந்தாா். இதனால், சந்தேகமடைந்த தமிழரசன் விசாரித்தபோது, காரை சேலத்தில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
புகாரின்பேரில் முதலியாா்பேட்டை போலீஸாா் ஜெயலட்சுமி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.