புதுவையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு வழங்கும் உற்பத்தி மானியத் தொகை செலுத்தப்பட்டது என வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவை மாநிலத்தில் கடந்த சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்யாமல், நவரை பருவத்தில் சாகுபடி செய்த 1,208 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு அரசின் உற்பத்தி மானியம் வழங்கப்பட்டது. இதன்படி, ஒரு ஏக்கருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 2,058 ஏக்கருக்கு ரூ.1 கோடியே 2 லட்சத்து 90 ஆயிரமானது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.
இதேபோல, 156 அட்டவணைப் பிரிவு விவசாயிகளுக்கும் உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் 214 ஏக்கருக்கு ரூ.12 லட்சத்து 87 ஆயிரம் செலுத்தப்பட்டது.
2020-21-ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் விதை நெல் உற்பத்தி செய்து, வேளாண்மைத் துறைக்கு வழங்கிய 33 விவசாயிகளுக்கும், ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 640 தொகை செலுத்தப்பட்டது.
2020-21-ஆம் ஆண்டு சம்பா நெல், மணிலா, பயறு வகைகள், எள், சிறு தானியங்கள், பருத்தி சாகுபடி செய்த 80 அட்டவணை விவசாயிகளுக்கும், உற்பத்தி மானியமாக ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் தொகை, அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இதையடுத்து, கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம், சொா்ணவாரியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் விரைவில் வழங்கப்படும் என்றாா் அவா்.