புதுச்சேரி: புதுச்சேரியில் ரமலான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. கரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக தங்களது வீடுகளில் தொழுகை நடத்தி வந்த இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையினையொட்டி புதுச்சேரியில் உள்ள குப்தா பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளிவாசல், சுல்தான்பேட்டையில் உள்ள முகம்மதியா பள்ளிவாசல் மற்றும் காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை 7 மணி முதல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இதே போல் கடற்கரை காந்தி சிலை எதிரே தவ்ஹித் ஜமா அத் சார்பில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஒருவருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.