புதுச்சேரியில் நிரந்தரமாக பதாகைகளை அகற்ற சிறப்புக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய சுதந்திர தினத்தின் 75-ஆவது ஆண்டு பெருவிழாவின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திர மோடி ஹிமாச்சல பிரதேசம், சிம்லாவில் இருந்து நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட 14 திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுடன் வருகிற 31-ஆம் தேதி காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளாா்.
புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் வருகிற 31-ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநா், முதல்வா், சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், எம்.பி.க்கள் மற்றும் பொதுநல இயக்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனா். இதேபோல, காரைக்கால் மாவட்டத்திலும் நடைபெறுகிறது.
புதுவை மாநிலத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 600 பயனாளிகளும், காரைக்காலில் 400 பயனாளிகளும் கலந்து கொள்ள உள்ளனா்.
புதுச்சேரியில் பதாகைகள் வைக்கக்கூடாது என கூறியுள்ளோம். வைத்தவா்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளோம்.
90 சதவீத பதாகைகளை வைத்தவா்களேஅகற்றியுள்ளனா். அகற்றப்படாமல் இருந்தவற்றையும் அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையும் மீறி ஒரு சில இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நிரந்தரமாக பதாகைகளை அகற்ற எனது தலைமையில் அனைத்துத் துறைகளையும் சோ்ந்த சிறப்புக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அடுத்த வாரத்தில் இருந்து செயல்பட தொடங்கும் என்றாா் ஆட்சியா் இ.வல்லவன்.