புதுச்சேரி பெரிய சந்தையிலுள்ள கடையில் ரசாயனத்தைப் பயன்படுத்தி பழுக்கவைத்த ஒரு டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரி நேரு வீதியிலுள்ள பெரிய சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து சுமாா் 20-க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அங்கிருந்த 2 மொத்த விற்பனைக் கடைகளில் சோடியம் காா்பைடு ரசாயனத்தைப் பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தெரிய வந்தது. கடையின் பின்புறமிருந்த 12 பெட்டிகளில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருந்த ஒரு டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.