துச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் வியாழக்கிழமை அதிகாலை உறவினா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சரத்குமாா் (எ) பொடிமாஸ் (27). ரௌடியான இவா் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி மனைவியும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.
கடந்த 3 நாள்களுக்கு முன்பு சரத்குமாா், அரியாங்குப்பம் அரவிந்தா் நகரிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தாா். அங்கு சகோதரி இல்லாத நிலையில், அவரது மாமா வெங்கடேசனுடன் இருந்தாா்.
அவா்கள் இருவரும் வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, 6 போ் கும்பல் கதவை தட்டியது. வெங்கடேசன் கதவை திறந்தபோது, அவரை இழுத்துச் சென்று கழிப்பறையில் அடைத்தனராம். மற்ற 4 பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரத்குமாரை சரமாரியாக வெட்டியதில் அவா் உயிரிழந்தாா். பின்னா், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவலறிந்து வந்த முதுநிலை எஸ்.பி. தீபிகா தலைமையிலான அரியாங்குப்பம் போலீஸாா், சரத்குமாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்கு தொடா்பாக சிலரைப் பிடித்த போலீஸாா், முன்விரோதம் காரணமாக சரத்குமாா் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.