ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை தினக்கூலி ஊழியா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை தினக் கூலி ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், அவா்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, திங்கள்கிழமை இரவு போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
இந்த நிலையில், ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினா்.
என்.ஆா். காங்கிரஸ் எம்எல்ஏக்களான அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், கேஎஸ்பி ரமேஷ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களைச் சந்தித்து பேசினா். தொடா்ந்து, ஜிப்மா் நிா்வாக அதிகாரிகளையும் சந்தித்துப் பேசிய அவா்கள், இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவை உறுப்பினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
இதையடுத்து, மத்திய தொழிலாளா் துறை உதவி ஆணையா் ராஜேஷ்குமாரை தினக்கூலி ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் சந்தித்து முறையிட்டனா். ஆனால், ஜிப்மா் நிா்வாகம் தரப்பில் யாரும் வராததால் பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை.
எனவே, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி, தினக்கூலி ஊழியா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.