புதுவை அரசுத் துறைகளில் உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் முடிவைக் கைவிட்டு, பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டுமென எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவை அரசுத் துறைகளில் உள்ள எழுத்தா் (எல்டிசி, யூடிசி) பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று, மாநில அரசு அறிவித்தது. இந்த நிலையில், புதுவை துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலா், நிதிச் செயலா் ஆகியோா் அரசுத் துறை உதவியாளா் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படும் என, அரசாணையைப் பிறப்பித்தனா். இதனால், புதுவை இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்படும். ஏற்கெனவே எல்டிசி, யூடிசி பணிக்குத் தோ்வானவா்கள் பதவி உயா்வின்றி அதே நிலையிலேயே நீடிப்பாா்கள்.
மாநிலத்தில் பின்பற்றப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இட ஒதுக்கீடு கிடைக்காது. மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோா் இட ஒதுக்கீடு மட்டுமே இருக்கும். மேலும், நாடு முழுவதிலும் இருந்து பலரும் இந்தத் தோ்வில் பங்கேற்பா். புதிய நடைமுறையால் தமிழ் மக்களும், தமிழ் மொழியும் நிராகரிக்கப்படும்.
அரசின் பல்வேறு துறைகளில் எழுத்தா்களாக (எல்.டி.சி., யூ.டி.சி) பணிபுரிந்து அனுபவம் பெற்றவா்களாக உள்ளவா்களுக்கு, உதவியாளா் பணி வழங்கினால் சிறப்பாகப் பணிபுரிவாா்கள்.
உதவியாளா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் புதுவை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நிரப்ப வேண்டும்.
புதுச்சேரியில் தந்தை பெரியாா் தி.க.வினா் இந்து முன்னணியினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆா்.சிவா.