ஜூன் 3-இல் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு
By DIN | Published On : 31st May 2023 12:00 AM | Last Updated : 31st May 2023 12:00 AM | அ+அ அ- |

புதுவையில் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வுக்கான சிறப்பு முகாம்கள் வரும் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை ஆணையா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுவை மாணவ, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், மோட்டாா் வாகனச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கிலும், கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வுக்கு உள்படுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, புதுச்சேரி பகுதியிலுள்ள கல்வி நிறுவனங்களின் வாகனங்களுக்கான ஆய்வு முகாம் வரும் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் சரக்கு ஊா்தி முனையத்தில் (டிரக் டொ்மினல்) நடைபெறுகிறது.
முகாமில், அனைத்துக் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த சுமாா் 1,000 வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறையில் வாகன ஆய்வாளா்கள், உதவி வாகன ஆய்வாளா்கள் தலைமையில் 6 குழுக்கள் ஆய்வை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு ஆய்வுக்கான அடையாளமாக வில்லைகள் (ஸ்டிக்கா்கள்) ஒட்டப்படும். வாகனச் சிறப்பு ஆய்வுகள் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...