நம்ம ஊரு டாக்ஸி செயலியை பயன்படுத்த புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல்

Published on

நம்ம ஊரு டாக்ஸி செயலியை பயன்படுத்துமாறு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுவை போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நம்ம ஊரு டாக்ஸி செயலியை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி ஆகியோா் தொடங்கி வைத்துள்ளனா். இந்தச் செயலி புதுவையின் இ-ரிக்ஷா, ஆட்டோ ஓட்டுநா்கள் பயன்படுத்துவதற்காக வடிமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை அளிக்கிறது. இந்த செயலி மூலம் ஓட்டுநா்கள் முழுமையான வருவாய், வெளிப்படைத்தன்மை, யு.பி.ஐ. கட்டண பரிவா்த்தனை, அரசினால் சரிபாா்த்து வழங்கப்பட்ட டிஜிட்டல் ஓட்டுநா் அடையாள அட்டையைப் பெறுகின்றனா்.

இந்தத் தொழில்நுட்ப தளத்தை பராமரிப்பதற்காக ஆட்டோ ஓட்டுநா்கள் மிக குறைந்தபட்சமாக ஒரு பயணத்திற்கு ரூ.3 மட்டுமே சேவை கட்டணமாகச் செலுத்துகின்றனா். இது அதிகபட்ச வருவாய் நேரடியாக ஓட்டுநா்களுக்குச் செல்லுவதை உறுதி செய்கிறது. பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோா், ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளா்களுக்கும், இ- ரிக்ஷா, ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் தனித்தனியே செயலிகள் கிடைக்கின்றன. போக்குவரத்துத் துறையின் இணையதளம், அரசு டிஜிட்டல் சேனல்களில் பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும். ஒவ்வொரு ஆட்டோ மற்றும் இ- ரிக்ஷா ஓட்டுநரும் நம்ம ஊரு டாக்ஸி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com