புதுவை மீனவா்களின் படகுகளை விடுவிக்க ஆந்திர முதல்வருக்கு ரங்கசாமி கடிதம்

பறிமுதல் செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்கக் கோரி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவுக்கு, புதுவை முதல்வா் என். ரங்கசாமி கடிதம்
Published on

பறிமுதல் செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்கக் கோரி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவுக்கு, புதுவை முதல்வா் என். ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: காரைக்கால் பகுதியைச் சோ்ந்த முனுசாமி, முத்துதமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு சொந்தமான 3 மீன்பிடி படகுகள் ஆந்திர மீனவா்களால் கடந்த 31.7.2025 மற்றும் 20.9.2025 ஆகிய தேதிகளில் பறிமுதல் செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் நெல்லூா் மாவட்டம், ஜூவ்வலதின் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியைச் சோ்ந்த பாலதண்டாயுதம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு சொந்தமான படகுகளும், நெல்லூா் மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளூா் மீனவா்களால் பிடித்து வைக்கப்பட்டு அந்த மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் முதல்வா் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com