அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் புதன்கிழமை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் புதன்கிழமை வழங்கினார். இந்தச் சான்றிதழ் வழங்குவதன் மூலம் குழந்தைகளை கண்காணித்தல், தேசிய முன்பருவக் கல்விக் கொள்கை 2013, அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் போன்றவைகளை சிறப்பாக செயல்படுத்திடவும், அங்கன்வாடி மையம், ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்து, இடைநிற்றலை குறைக்கவும் உதவும்.
மேலும், இச்சான்றிதழ் வழங்குவதால் அங்கன்வாடிப் பணியாளர்களை ஊக்குவிக்கவும், மக்களிடையே இத்திட்டத்தின் தேவைகளை பயன்படுத்த ஆர்வத்தை ஏற்படுத்தவும் ஏதுவாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் 2,938 அங்கன்வாடி மையங்களில் மதிய உணவுடன் முன்பருவக்கல்வியை 2 முதல் 5 வயதுக்குள்பட்ட 66,758 குழந்தைகள் பயில்கின்றனர். அக்குழந்தைகளில் 5 வயது நிறைவுபெற்ற 2,683 குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.