விழுப்புரம் மாவட்டம், மடப்பட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மடப்பட்டில் திருக்கோவிலூர் சாலையில் இயங்கி வந்தது. இந்த இடத்துக்கு உரிமை கோரி ஒரு தரப்பினர் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கட்சியின் ஒன்றிய நிர்வாகி நாராயணன், தன்னை தாக்கிவிட்டு கட்சி அலுவலகத்தை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து விட்டதாக திருமுண்டீச்சரம் கிராமத்தைச் சேர்ந்த சிலரின் மீது திருநாவலூர் போலீஸில் புகார் செய்தார்.
பின்னர் மடப்பட்டில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஒன்றுகூடி கட்சி அலுவலக கொட்டகை அமைத்தனர். அங்கு மாவட்டச் செயலர் சரவணன், ஒன்றியச் செயலர் குமார், மாவட்ட நிர்வாகிகள் நாராயணன், குப்புசாமி, கோதண்டபாணி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. அலுவலகம் இடிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து வருகிற 20-ஆம் தேதி மடப்பட்டு காந்தி சிலை அருகில், கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.