புத்தந்தூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஓடை, வாய்க்கால், வரத்து பணி செய்து வருபவர்களுக்கு சரிவர கூலி வழங்காததைக் கண்டித்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சிக்கு உள்பட்டது புத்தந்தூர் கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில், பணிபுரிந்தவர்களுக்கு 10 வார காலமாக கூலி வழங்கவில்லையாம். பலமுறை கேட்டும் சரியான பதில் வரவில்லையாம்.
இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.பொன்னம்பலம், அ.கல்யாணசுந்தரம் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பளப் பணத்தை முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.