

நதிகளை இணைக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று சத்குரு ஜக்கிவாசுதேவ் கூறினார்.
"இந்திய நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்' என்ற இயக்கத்தின் மூலம், நாட்டில் வறண்டு கிடக்கும் ஆறுகளை மீட்கும் கோரிக்கைகளுடன் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் விழிப்புணர்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி முதல் இமயம் வரை 16 மாநிலங்கள் வழியாக அவர் பிரசாரப் பயணம் மேற்கொள்கிறார்.
இதனையொட்டி அண்மையில், கோயம்புத்தூரில் விழிப்புணர்வு வாகனப் பயணத்தை தொடங்கிய அவர், மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று, திருச்சி வழியாக விழுப்புரம் மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்தார். விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச் சாவடி பகுதியில் மாலை 3.45 மணிக்கு அவருக்கு ஈஷா யோகா மைய தன்னார்வலர்கள் பாலமுருகன், முத்துசரவணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், நதிகளை மீட்போம் என்ற தட்டிகளுடன் அவரை வரவேற்றனர். அப்போது அவர், பாரதம் மகாபாரதம், புண்ணிய நதிகள் பாயும் பாரதம் என்று பாடல் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
பிறகு சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது: நதிகளை மீட்போம் என்று இன்று ஒரு நாள் மட்டும் கோஷமிட்டு, போய்விடக் கூடாது. தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில், எதிர்காலத்தில் ஆறுகளெல்லாம் வறண்டு, தண்ணீர் இல்லாமல் போகும் நிலை உள்ளது.
இதனால், எதிர்காலத்தில் தண்ணீருக்காக யார் காலிலும் நாம் விழ வேண்டிய அவசியம் வராது. நாட்டிலுள்ள நதிகளை இணைத்தால் தண்ணீர் பிரச்னைகள் தீரும். நதிகளை இணைக்கும் சட்டத்தை இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி பிரசாரப் பயணம் செல்கிறேன். இதற்கு ஆதரவாக அனைவரும் 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும், ஒரு நாளைக்கு 3 பேர் வீதம், மிஸ்டு கால் கொடுத்து குறைந்தபட்சம் 100 பேருக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.