விழுப்புரம் மாவட்டத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் பணிப்பதிவேடு கணினி மயமாக்குதல் தொடர்பாக, அந்தத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து பணம் பெற்றளிக்கும் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கருவூல கணக்குத் துறையால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நிதி மனித வள மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு கணினி மயமாக்குதல் பணி, தனியார் நிறுவனத்தினரால் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் 9 சார்நிலை கருவூலங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
இப்பணியின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்டத்திலுள்ள அனைத்து பணம் பெற்றளிக்கும் அலுவலர்களையும் விசாரித்து ஆய்வு செய்தார். பணிப்பதிவேடு கணினி மயமாக்குதலுக்கு, இன்னமும் பணிப்பதிவேடு அளிக்காத அலுவலர்கள், பணிப்பதிவேடு அளித்து எழுதியவற்றை சரிபார்த்து அளிக்காத அலுவலர்களை தனித்தனியே ஆய்வு செய்யப்பட்டது.
இவ்வார இறுதிக்குள் பணிப்பதிவேடு சரிபார்த்து அளிக்கும்படியும், மேலும் அந்தந்த அலுவலகத்தில் உள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை, காலிப்பணியிடம், பணிப்பதிவேடு உள்ளவர்களின் எண்ணிக்கை, தலைமை அலுவலகத்தில் பணிப்பதிவேடு பராமரிக்கப்படுபவர்கள் விவரங்களை செப்.8-க்குள் அளிக்கும்படியும் பணம் பெற்றளிக்கும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, திண்டிவனம் உதவி ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட கருவூல அலுவலர் சீனிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஸ்ரீதர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.