கள்ளக்குறிச்சி அருகே சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் மக்களவை உறுப்பினரால் தத்தெடுக்கப்பட்ட க.அலம்பளம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மத்திய அரசின் கள ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட க.அலம்பளம் ஊராட்சியை கடந்த 2015ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதி உறுப்பினர் க.காமராஜ் தத்தெடுத்தார். மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்ட சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின்படி, அந்த ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக, கல்வி, மருத்துவம், சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நிலையில், க.அலம்பளம் ஊராட்சியை மத்திய கள ஆய்வாளர்கள் சுனில்குமார், மதுசூதனன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, கள ஆய்வாளர்களை கிராம மக்கள் ஊரின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று இப் பகுதியில் சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் இல்லாததை சுட்டிக் காண்பித்தனர். மேலும், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
அப்போது, மக்களவை உறுப்பினர் க.காமராஜ், இந்தத் திட்டத்துக்கென தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. மக்களவைத் தொகுதி உறுப்பினரின் நிதியின் கீழ் 2 பால்சேகரிப்பு மையங்கள், உயர் கோபுர மின் விளக்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மக்களவை உறுப்பினர் க.காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) கே.நாராயணசாமி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வதி, ஒன்றிய பொறியாளர் அருண்ராஜா, ஒன்றிய மேற்பார்வையாளர் சுமதி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிக்கண்ணு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.