பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தல்
திருக்கோவிலூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இது குறித்து, அக்கட்சியின் , விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் செய்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருக்கோவிலூர் அருகே மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கடந்த 12-ஆம் தேதி அதே பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வரும், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது, அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அந்தப் பள்ளி நிர்வாகம் கடந்த15-ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னை பலாத்காரம் செய்ய முயன்றவர் யார் என தெரியவில்லை என்றே அந்த மாணவி கூறியிருந்தார்.
இதனிடையே, பள்ளித் தலைமை ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில், அந்தப் பள்ளியின் கடைநிலை ஊழியர் ஆல்பர்ட், போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மை குற்றவாளியை காப்பாற்ற போலீஸார் அவசரமாக இந்த வழக்கை முடித்திருப்பதும், இதில், தொடர்புடைய உண்மை குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பதும் தெரிகிறது. இதே போல், செங்கணகொல்லை கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர், கடந்த 26.10.2017ம் தேதி, அங்குள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, மாணவி ஒருவர் சந்தேகமான முறையில் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவங்கள், பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த வழக்குகளை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிசிஐடி) மாற்றம் செய்து, வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் வருகிற 26ஆம் தேதி, திருக்கோவிலூரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது என்றார். கலியபெருமாள், சுரேஷ், மணிவாசகம், கலியமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.