திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 25 அரசுப் பள்ளிகளுக்கு கதை அருவி தொகுப்பு அட்டைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும், மாணவர்களை படிக்க வைப்பதென்பது, ஆசிரியர்களுக்கு கடினமான செயலாக
உள்ளது.
மாணவர்கள் தாமாகவே முன்வந்து, ஆர்வத்துடன் வாசிப்பதற்கு ஏதுவாக, சென்னையில் உள்ள ராஜலட்சுமி-சீனுவாசன் அறக்கட்டளையானது, தலா ஒரு அரசுப் பள்ளிக்கு ரூ.1,050 மதிப்பிலான நூறு கதை அருவி தொகுப்பு அட்டைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையடுத்து, இந்த அறக்கட்டளை சார்பில் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, கதை அருவி தொகுப்பு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
திருக்கோவிலூர் வட்டார வள மையத்தில் இருந்து, இந்த கதை அருவி தொகுப்பு அட்டைகளை கல்வி மாவட்ட அலுவலர் த.விஜயலட்சுமி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு திங்கள்கிழமை வழங்கினார். அப்போது, வட்டாரக் கல்வி அலுவலர் இரா.முரளிகிருஷ்ணன், நல்லாசிரியர் கு.நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.
கதை அருவி தொகுப்பு அட்டைகளை அறக்கட்டளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பிரபாகரன் செய்திருந்தார்.