அரசாணை நகல் எரிப்பு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 21பேர் கைது
விழுப்புரத்தில் அரசாணை நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 21 பேரை போலீஸார் வியாழக்கிழமை மாலை கைது செய்தனர்.
அரசுத் துறைகளை தனியார் மயமாக்கும் வகையில், அரசுப் பணியிடங்களை குறைக்க வெளியிட்டப்பட்ட தமிழக அரசின் அரசாணை 56-ஐ கண்டித்து, விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை மாலை அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் துணைத் தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மகாலிங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் கௌஞ்சிவேலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, அவர்கள் தமிழக அரசின் அரசாணை 56 நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைக் கண்ட போலீஸார், அரசாரணை நகல் எரிப்பதை தடுத்து 21 பேரை கைது செய்தனர்.