சிபிஐ-யில் வேலை வாங்கித் தருவதாக, விழுப்புரம் மாவட்ட இளைஞர்களிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த முன்னாள் ஆயுதப்படைக் காவலர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேர் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த சர்தார் மகன் ஜமீர்(27). பொறியியல் பட்டதாரியான இவரிடம், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜீவ்கிருஷ்ணன்(35) என்பவர் அறிமுகமாகி, தான் காவல்துறையில் பணியாற்றுவதாகவும், தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாக சிபிஐ-யில் வேலை வாங்கித் தருவதாக கூறினாராம். இதனை நம்பி கடந்த 2014-ஆம் ஆண்டு ஜமீர், அவரது நண்பர்கள் இருவர் வேலை வாங்கித்தருமாறு ரூ.33 லட்சத்தை ராஜீவ்கிருஷ்ணனிடம் கொடுத்தனர். ஆனால், கூறியபடி, ராஜீவ்கிருஷ்ணன் வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. மாறாக, மிரட்டல் விடுத்த அவர், தலைமறைவாகிவிட்டாராம்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம், அண்மையில் ஜமீர் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான தனிப்படையினர் ராஜீவ் கிருஷ்ணனை தேடி வந்தனர்.
இந்த நிலையில், ராஜீவ்கிருஷ்ணன் சென்னையிலிருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு காரில் செல்வதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் காரில் வந்த அவரை போலீஸார் மடக்கி கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2017 முதல் 2014-ஆம் ஆண்டு வரை பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றியபோது, சென்னை தலைமைச் செயலகத்தில் அவருக்கு காவல்துறையின் கணினிப் பிரிவில் பணி வழங்கப்பட்டதாம். ஆனால், ஒழுங்கீன நடவடிக்கையால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்பிறகு, காவல்துறையில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து, இளைஞர்களிடம் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்த சொகுசு கார், 2 விலை உயர்ந்த செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர் இதுபோன்று வேறு இளைஞர்களை ஏமாற்றியுள்ளாரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.