திண்டிவனம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாணவர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர். விடுதியின் கட்டடம் பழுதடைந்திருப்பதாகவும், குடிநீர் பிரச்னை உள்ளதாகவும், தரமான உணவு வழங்கப்படவில்லை எனவும் மாணவர்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில், குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வலியுறுத்தி, விடுதி முன் மாணவர்கள் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து திண்டிவனம் வட்டாட்சியர் பிரபுவெங்கடேஸ்வரன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து, குறைகள் அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.