திண்டிவனத்தை அடுத்த அனுமந்தையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் வாண வேடிக்கைகளுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி சிவனுடன் கோயிலிலிருந்து இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவ மேடைக்கு பல்லக்கில் கொண்டு வரப்பட்டார். அங்கு ஊஞ்சலில் அமர்ந்தவாறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அனுமந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன், தர்மகர்த்தா சின்னசாமி மற்றும் உபயதாரர் விநாயகம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி, மரக்காணம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். மரக்காணம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.