விழுப்புரம் அருகே திங்கள்கிழமை இரவு புதுவையைச் சேர்ந்த ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பகுதி பொறையூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ஜெகன் (31) (படம்). ரௌடியான இவர் மீது பொறையூரைச் சேர்ந்த சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவருக்கும், புதுச்சேரியை அடுத்த பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த லட்டு (எ) நவீன் என்பவருக்கும் இடையே மீன் வியாபாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், ஜெகன் திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள அமணங்குப்பம் கிராமத்துக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த நவீன், தனது நண்பர்களுடன் அங்கு சென்று ஜெகனை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ஜெகன் உயிரிழந்தார். தகவல் அறிந்து விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர் உள்ளிட்ட போலீஸார் நேரில் சென்று விசாரித்தனர்.
மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த ரௌடி என்பதால் புதுச்சேரி மாநில போலீஸாரும் அங்கு வந்து பார்வையிட்டனர்.
பின்னர், சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் அருகே புதுவை ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.