விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2,628 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாவட்டம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது.
செஞ்சி வட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. மாவட்ட காவல்துறை கணக்கெடுப்பின்படி, செஞ்சி காவல் உட்கோட்டத்தில் 512 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் 470, திருக்கோவிலூர் 420, கள்ளக்குறிச்சி 375, விழுப்புரம் 367, திண்டிவனம் 225, கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் 209 சிலைகள் என மொத்தம் 2,628 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது குறித்தும், நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதேபோன்று, காவல்துறையும் பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், மின்சார வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் காளிமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், பொது விழாக்கள், பேரணிகள், பொதுக்கூட்டம், பண்டிகை (விநாயகர் சதுர்த்தி) கொண்டாட்டத்தின் போது, மின் திருட்டை தடுக்கும் வகையில், மேடை மற்றும் தெரு விளக்குகள் அமைக்க மின் வாரியத்திடம் தடையில்லா சான்று பெறவேண்டும்.
மேலும், இது தொடர்பாக மின் பகிர்மான வட்டத்தில் உள்ள இயக்ககம் மற்றும் பராமரிப்புப் பிரிவு உதவி செயற்பொறியாளரிடம் அந்தந்த பகுதியினர் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.