சங்கராபுரத்தில் இளைஞரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சங்கராபுரத்தைச் சேர்ந்த காசிலிங்கம் மகன் ஏழுமலை (28). இவர், வெள்ளிக்கிழமை சங்கராபுரத்தில் இருந்து பூட்டைக்கு சென்று கொண்டிருந்தார். சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு முன் சுமார் 100 பேர் கூட்டமாக நின்றிருந்தனர். அப்போது, ஏழுமலை அங்கிருந்த தனது நண்பரிடம் இங்கு என்ன கூட்டம் எனக் கேட்டுள்ளார்.
இதற்கு அங்கிருந்தவர்களில் சிலர், நியாயம் கேட்க நீ யார் எனக் கூறி, ஏழுமலையை திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பப்லு, சேகர், விவேக் உள்பட 21 பேர் மீது புகார் அளித்ததன் பேரில், தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (45), பூட்டை கிராமத்தைச் சேர்ந்த விவேக் (27) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.