கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக கூடுதலாக கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பான அறையில் தேர்தல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வைத்து சீல் வைத்தனர்.
இத்தொகுதி தேர்தலுக்காக விழுப்புரம் அரசு சேமிப்புக் கிடங்கில் இருந்து 413 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 410 கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 426 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை கடந்த மார்ச் 28ஆம் தேதி கொண்டு வரப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அந்த இயந்திரங்கள் போதுமானதாக இல்லை. ஆகவே, கூடுதலாக 413 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 410 கட்டுப்பாட்டுக் கருவிகள், 426 விவிபாட் இயந்திரங்கள் விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்டன.
இதையொட்டி, பள்ளி அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறையின் சீல் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை அகற்றப்பட்டு, அதில் கூடுதலாக வந்த மின்னணு இயந்திரங்கள் உள்ளே வைக்கப்பட்டன.
அந்த அறைக் கதவுக்கு கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வட்டாட்சியர் பூ.தயாளன் சீல் வைத்தார்.
தனி வட்டாட்சியர் எஸ்.சையத்காதர், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜி.குமரன், வருவாய் ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிசிடிவி கேமரா மூலமும் அந்த அறை கண்காணிக்கப்பட்டு வருகிறது.