நீட் தேர்வால் தமிழகத்தில் அடுத்த தலைமுறையினர் மருத்துவராக முடியாது என்று திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சபாபதி மோகன் கூறினார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சபாபதி மோகன் பேசியதாவது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், தமிழகத்தில் 8 வழிச் சாலையை கொண்டு வருவோம் என்றும், நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வைப்போம் என்றும் கூறியுள்ளார். எனவே, எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கினாலும், எந்த ஜாதியாக இருந்தாலும் நீட் தேர்வால் தமிழகத்தில் அடுத்த தலைமுறையினர் மருத்துவராக முடியாது. பணம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும். பாஜக நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், இட ஒதுக்கீடுக்கு எதிராகவும் உள்ளது.
தமிழகத்தில் இட ஒதுக்கீட்டால்தான் கடந்த 25 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் மருத்துவர்களும், பொறியாளர்களும் உருவாகியுள்ளனர்.
ஆகவே, தமிழகத்தில் நீட் தேர்வை நீக்க வேண்டுமானால், திமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில் திமுக மாவட்டப் பொருளாளர்
புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.