விழுப்புரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பிரசாரத்தின்போது கல் வீசப்பட்டதில் இளைஞர் காயமடைந்தார்.
விழுப்புரம் அருகே தொடர்ந்தனூர் கிராமத்துக்கு சனிக்கிழமை இரவு விழுப்புரம் மக்களவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்
குமார், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் வாக்கு சேகரிக்கச் சென்றனர்.
அப்போது, அவர்களை வழிமறித்த ஒரு தரப்பினர், வாக்கு சேகரிக்க ஊருக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கிருந்த போலீஸார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மர்ம நபர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டோரை நோக்கி கற்களை வீசினர்.
இதில், ராமையன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் அஜீத் (24) தலையில் காயம் ஏற்பட்டது.
அவர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதிமுகவினருக்கு எதிர்ப்பு:
இதேபோல, அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு ஆதரவாக, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கூட்டணிக் கட்சியினருடன் விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் வாக்கு சேகரிக்கச் சென்றார்.
அப்போது, அங்கு கூடியிருந்த சிலர், அவர்களை வாக்கு சேகரிக்க அனுமதிக்க முடியாது என தடுத்தனர். உடனடியாக போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிரசாரத்துக்காக விழுப்புரம் வந்ததால், அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட அனைவரும் அங்கு சென்றுவிட்டனர்.