விழுப்புரத்தில் திங்கள்கிழமை அதிமுக பிரமுகரை வழி மறித்து மர்ம நபர்கள் ரூ.35 ஆயிரம் ரொக்கம், இரு சக்கர வாகனத்தை பறித்துச் சென்றனர்.
விழுப்புரம், ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ்(48), அதிமுக பிரமுகர். இவரது நண்பர் விழுப்புரம் கல்லூரி சாலையைச் சேர்ந்த சண்முகநாதன் (60). இருவரும் திங்கள்கிழமை அதிகாலை 2 மணி அளவில் ஜானகிபுரம் பகுதியில் இருந்து விழுப்புரம் நகரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
தந்தை பெரியார் நகரில் வந்தபோது, இவர்களை மர்ம நபர்கள் வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.35 ஆயிரம் ரொக்கம், இரு சக்கர வாகனம், 2 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.