விழுப்புரம் அருகே அமமுக பிரமுகர் வீட்டில் திங்கள்கிழமை வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த ப.வில்லியனூரைச் சேர்ந்தவர் ராஜசேகர்(56). அமமுக கண்டமங்கலம் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
உடனே, விழுப்புரம் வருமான வரித் துறை அதிகாரிகள் 4 பேர், ராஜசேகர் வீட்டுக்கு திங்கள் கிழமை மாலை 4 மணி அளவில் சென்று,
கதவைப் பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து உதவிப் பொறியாளர் கருணாகரன் தலைமையிலான விழுப்புரம் தேர்தல் பறக்கும் படையினர், வளவனூர் போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். மேலும், அமமுகவினரும் அங்கு திரண்டனர்.
ராஜசேகர் வீட்டில் 3 மணி நேரத்துக்கு மேல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
எனினும், ரொக்கப்பணம், ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இரவு 8 மணி அளவில் சோதனையை முடித்துக் கொண்டு வருமான வரித் துறையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.