கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1794 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் தேர்தல் நாளன்று வாக்குகள் பதிவான பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பான அறையில் வைக்கப்படும்.
இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையை கண்காணிக்கும் வகையில், மொத்தம் 52 கேமராக்களை பொருத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் அ.அனுசுயாதேவி பார்வையிட்டார்.
உடன் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பூ.தயாளன், தனி வட்டாட்சியர் எஸ்.சையத்காதர், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன், காவல் ஆய்வாளர் தங்க.விஜயகுமார், உதவி ஆய்வாளர் வினோத்குமார் உடன் இருந்தனர்.