மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து செயல்படுவதாகத் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் எம்.மேரிஜான் விழுப்புரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த மக்களவைத் தேர்தலில் இந்திய அரசியல் சாசனத்தின்படி, நாட்டில் ஜனநாயகம், மத சுதந்திரம், சிறுபான்மையினர், தலித், பழங்குடியினர் ஆகியோரின் உரிமைகள் பாதுகாப்பு, அடித்தட்டு மக்களின் தேவைகள் ஆகியவற்றை உறுதி செய்யும் ஆட்சி அமைய வேண்டும். இதற்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்க தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் முடிவுசெய்துள்ளது.
அதன்படி, மத அடிப்படையிலான அநீதியை தடுத்து, நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா பரிந்துரைப்படி, தலித் கிறிஸ்தவர்கள், தலித் இஸ்லாமியர்களுக்கு பட்டியலினத்தவரின் உரிமையை வழங்கும் ஆட்சி அமைய தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென எங்கள் இயக்கம் சார்பில் முடிவு செய்து, ஆதரவு திரட்டி வருகிறோம் என்றார்.
இயக்கத்தின் பொதுச் செயலர் தலித் சி.ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.