பறக்கும் படை சோதனையில் ரூ.1.16 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 17th April 2019 06:43 AM | Last Updated : 17th April 2019 06:43 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தச்சூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு சிலர் பணம் விநியோகிப்பதாக வந்த தகவலின் பேரில், தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் அமுதா தலைமையிலான பறக்கும்படையினர் அங்கு சென்றனர். அவர்களைக் கண்டதும் ஒரு கும்பல் பணம் வைத்திருந்த நெகிழிப்பை, வார்டு வாக்காளர் பெயர் பட்டியலை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தது. அந்தப் பையில் இருந்த ரூ1லட்சத்து16ஆயிரத்து 800 ரொக்கப் பணத்தை பறக்கும்படையினர் கைப்பற்றி, கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர். அதே போல குன்னியூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையில், ஒரு காரிலிருந்து 72 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, கார் ஓட்டுநர் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கல்சிறுநாகலூரைச் சேர்ந்த அசோக் (28), கண்ணன் (27), நாராயணசாமி (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...