திருக்கோவிலூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியின் போது, நாடகக் கலைஞர் நூலகப் புரவலராக இணைந்தார்.
திருக்கோவிலூரை அடுத்த பள்ளிச்சந்தல் கிராமத்தில் சித்திரைத் திருவிழா கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு கர்ணாசெட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ம.சேகர் தலைமையிலான
நாடகக் குழுவினரின் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, வாசிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நாடக ஆசிரியர் ம.சேகர், அந்தப் பகுதியில் நூலகம் இயங்கி வருவதை அறிந்து, பொதுமக்கள் முன்னிலையில் நூலக வளர்ச்சிக்காக ரூ. ஆயிரம் செலுத்தி புரவலராக இணைந்தார்.
நூலக வாசகர் வட்டத் தலைவர் மா.ராஜீவ் காந்தி, வீ.தனகோட்டி, கிராம முக்கியப் பிரமுகர்கள் வடமலை, ஏழுமலை ஆகியோர் நாடக ஆசிரியரின் முயற்சியை வெகுவாகப் பாராட்டி பேசினர். அப்போது, நாடகக் கலைஞர்கள் பெ.கிருஷ்ணன், ஆறுமுகம், ரா.விக்னேஷ், நேரு, நூலகப் பணியாளர் ஏ.அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.