விழுப்புரத்தில் நகை ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் சித்தேரிக்கரை ராகவேந்திரா நகரைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் பன்னீர்செல்வம்(46). இவர், விழுப்புரம் ராகவன்பேட்டை ராஜா நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் (51) உள்ளிட்டோருடன் இணைந்து ஆண்கள் சுய உதவிக்குழு தொடங்கி நடத்தி வந்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் குழுவில், 20 பேரை இணைத்து நகை சேமிக்கும் வகையில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனராம். இந்த ஏலச்சீட்டை முருகன் நிர்வகித்து வந்தார். இந்த சீட்டில் பன்னீர்செல்வமும் இணைந்து ஏலச்சீட்டு தொகையைச் செலுத்தி வந்தாராம். இதுவரை மொத்தம் 665 கிராம் தங்கத்துக்குரிய தொகையைச் செலுத்தினாராம். அதன் தற்போதையை மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏலச்சீட்டு முடிவடைந்ததால், உரிய தங்க நகையைக் கேட்டபோது அதை வழங்காமல் முருகன் காலம் தாழ்த்தி வந்தாராம். இதுகுறித்து கேட்டபோது, நகைகளை தர முடியாது என்று கூறியதோடு, பன்னீர்செல்வத்துக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இது குறித்து, பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின்பேரில்,
விழுப்புரம் நகர போலீஸார் மோசடி பிரிவில் வழக்குப் பதிவு செய்து முருகனை சனிக்கிழமை கைது செய்தனர். அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.