மீனவ கிராமத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள அழகன்குப்பம் மீனவ கிராமத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அழகன்குப்பம் கடல் முகத்துவாரத்தில், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு, தீயணைப்புத் துறை, காவல்துறையினர் மூலம் நடத்தப்பட்ட இந்த பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில், வெள்ளத்தில் 30 பயணிகளுடன் சிக்கிக்கொண்ட பேருந்தை முதல்நிலை பொறுப்பாளர்கள், தீயணைப்புத் துறையினர் படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்டனர்.
தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கால்நடைகளை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த செல்லிடப்பேசி கோபுரம் காற்றில் இடிந்து விழ, அந்த சமயத்தில் எப்படி தொடர்பு கொள்வது என்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, புயலால் சாலைகளில் சாய்ந்த மரங்கள், சுவர் இடிந்து விழுந்து அதனடியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு மீட்புக் குழுவினர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
வெள்ளப்பெருக்கின் போது படகுகள் மூலம் மீட்பது, இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை வெளியேற்றுவது, தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்தும் செயல் விளக்கம் செய்து காட்டினர்.
பேரிடரில் சிக்கியவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தல், அசாதாரண சூழ்நிலையில் சலனமின்றி நடந்து கொள்வது குறித்து சுகாதாரத் துறையினர் செயல் விளக்கம் அளித்தனர்.
பேரிடர் காலங்களில் இறந்த விலங்குகளினால் நோய் தொற்று ஏற்படும் முன்னர், அவற்றை அப்புறப்படுத்துவதை கால்நடைத் துறையினர் செய்து காண்பித்தனர். இந்த ஒத்திகை நிகழ்வை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்புடன் செயல்படுவது, மீட்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று அங்கிருந்த பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் மகேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார், துணை ஆட்சியர்கள் கவிதா, விஷ்ணுபிரியதர்ஷினி, ஊராட்சி உதவி இயக்குநர் ரத்தினமாலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், நலப்பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, கால்நடைத் துறை இணை இயக்குநர் மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், வட்டாட்சியர்கள் தனலட்சுமி, தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, சுரேஷ்குமார், செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.