திருநாவலூர் அருகே ஆரிநத்தம் ஊராட்சியில் வீட்டுமனை, குடிநீர் வசதி, ஏரி, குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய கிராமப்புற தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரிநத்தம் ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைச் செயலர் ஓ. மணிகண்டன் தலைமை வகித்தார்.
ஓ.வீரன், அன்பழகன், கொளஞ்சி, புஷ்பராஜ், ராமசாமி, கலியமூர்த்தி, அண்ணாமலை, மணிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் எம். வெங்கடேசன் கோரிக்கை உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் இ.கொளஞ்சிநாதன், மாவட்டச் செயலர் ப.கலியமூர்த்தி, ஒன்றியத் தலைவர் எ.ஏழுமலை, கிளைச் செயலர் ஓ. ஆறுமுகம், முற்போக்கு பெண்கள் கழக மாவட்டச் செயலர் அ.செண்பகவள்ளி, மாவட்டத் தலைவர் சுசிலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆரிநத்தம் கிராமத்தில் வீடில்லா ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். இக்கிராம பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக, அருகே வரும் நகர பேருந்தை சேந்தநாடு, ஆண்டிக்குழி, மட்டிகை வழியாக முத்தாண்டிகுப்பம் வரை இயக்க வேண்டும், கிராமத்தில் உள்ள ஏரி, குள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.