கடலூர் மத்திய சிறையில் ஆணியை விழுங்கி கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் முகமது இர்பான் (25). இவர், கடந்த ஆண்டில் திருட்டு வழக்கில் கள்ளக்குறிச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஆணியை விழுங்கிய நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறை அலுவலர் அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.