பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து காரில் மது கடத்திய கடலூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் சாவடி பகுதியில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட நிறுத்தினர். அப்போது, அதனை ஓட்டி வந்த நபர் இறங்கி ஓடிவிட்டார். சோதனையில், அந்த காரில் புதுச்சேரி மதுப் புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, காரில் வந்த விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சூளாங்குறிச்சியைச் சேர்ந்த சாராய பெண் வியாபாரியான சமுத்திரக்கனியை (48) போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், அந்தக் காரை ஓட்டி வந்த நபர் கடலூர் மாவட்டத்தில் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் சுந்தரேசன் என்பதும் சமுத்திரக்கனி செய்து வந்த மது கடத்தலுக்கு தொடர்ந்து உதவி செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சுந்தரேசன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) எஸ்.ஜெயக்குமார் பரிந்துரை செய்திருந்தார். இதன்படி, ஆய்வாளர் சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவர் சந்தோஷ்குமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.