விழுப்புரம் மாவட்டத்தில் நூலகமாக மாறிய இரு பள்ளிகள் !

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை குறைந்த இரு அரசுப் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை குறைந்த இரு அரசுப் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கிராமப் புறங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த 10 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இதற்கு, தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான ஈர்ப்பே முதன்மை காரணமாக உள்ளது. இதையடுத்து, அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கையை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,  மாணவர் சேர்க்கைக்கான பல்வேறு நடவடிக்கைகள் கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டன.
இருந்தபோதும், பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் 20 முதல் 40 மாணவர்களே படித்து வரும் நிலை உள்ளது. இதனால், அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மாற்றுப் பள்ளிகளுக்கு படிப்படியாக மாறுதல் செய்யப்பட்டனர். இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து போன பள்ளிகளை மூடிவிட்டு, அருகே உள்ள பள்ளிகளில் இணைக்கும் விதத்தில் அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள ஆரம்பப் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிட்டு, அந்தப் பள்ளிகளை பயனுள்ள நூலகங்களாக மாற்றிப் பயன்படுத்த கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் முதல் கட்டமாக, 
10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள  46 அரசு தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்பட்டன. இதையடுத்து அந்தப் பள்ளிகளில் பொது நூலகத் துறை சார்பில், நூலகம் தொடங்கப்பட்டுள்ளன.  விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை,  வானூர் அருகே உள்ள இரும்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,  ஒலக்கூர் அருகே உள்ள கோணலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு, நூலகமாக மாறியுள்ளன. அங்கு நூலகத் துறை சார்பில் தினக்கூலி பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: மாணவர்கள், பொது மக்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கவும்,  பொது அறிவை மேம்படுத்தவும்,  குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை நூலகமாக மாற்றும் சிறப்பு நிகழ்வை அரசு மேற்கொண்டுள்ளது.  
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த இரு பள்ளிகள்,  நூலகத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்தக் கட்டடங்களில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.  இந்த நூலகத்தில் முதல் கட்டமாக 500 புத்தகங்கள் வைத்து பராமரிக்கப்படும். மாதந்தோறும் சுழற்சி முறையில் புத்தகம் வழங்கப்படும்.  நூலகத்தில் தமிழ், ஆங்கில நாளிதழ்கள் இடம்பெறும்.  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நூலகம் இயங்கும். மாவட்ட நூலக ஆணைக் குழு செலவினங்களை ஏற்று பராமரிக்கும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com