தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண்மைத் துறையைக் கண்டித்து விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஐ.சகாபுதீன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட துணைச் செயலர் கே.ராமசாமி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஏ.கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் லட்சுமி, என்.தர்மேந்திரன், கே.மூர்த்தி, எஸ்.சுரேஷ், ஜி.நிதானம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராமநாதன், ஏழுமலை, மாசிலாமணி, பாவாடை, சபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டிய நெல், உளுந்து, மணிலா போன்ற விதைகளை, வேளாண் துறையினர் வெளிச் சந்தையில் விற்று வருகின்றனர். எ.ஆர்.ஐ. திட்டத்தில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு, இரண்டரை ஏக்கர் நெல்லுக்கு ரூ.5,000 மானியம் வழங்க வேண்டும். ஆனால்
ரூ.ஆயிரம் மட்டுமே வழங்குகின்றனர்.
இதுபோன்று, விவசாயிகளுக்கான மானிய திட்டங்களில் முறைகேடுகளைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த விவசாய சங்க நிர்வாகிகளை மிரட்டிய நேமூர் வேளாண் உதவி அலுவலர் மீது நடவடிக்கை வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.