விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதிகளை ஒதுக்கி, முன்னுரிமை அளித்து செயல்படுத்திட தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான தேவைகள் குறித்த விவரங்களை கணக்கெடுத்து, அனுப்பிவைக்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை கட்டமைப்பு விவரங்களை சேகரித்து அனுப்புமாறு, முதன்மைக் கல்வி அலுவலக உத்தரவின்பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 361 பள்ளிகளில் குடிநீர் கட்டமைப்புகள் இருந்தும் 92 பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளதாகவும், கழிப்பறை வசதிகள் 758 ஆண்கள் பள்ளிகளுக்கும், 761 பெண்கள் பள்ளிகளுக்கும் என மொத்தம் 1,519 பள்ளிகளில் கழிப்பறைகள் அமைக்க வேண்டும், 68 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் வேண்டும் என்று கோரி விவரங்களை அனுப்பி வைக்கப்பட்டன. கல்வித் துறை சார்பில் பெறப்பட்ட இந்த விவரங்கள், உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறைக்கு அனுப்பப்பட்டு, அந்தந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, முன்னுரிமை வழங்கி பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.