விழுப்புரம் மாவட்ட உணவகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.
உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட அளவிலான மேம்பாட்டுக் குழுக் கூட்டம், குழு உறுப்பினர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள், உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து நியமன அலுவலர் ஆ.வேணுகோபால் விளக்கமளித்தார். மேலும், உணவுப்பொருள்கள் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தங்கள் வணிகத்துக்கான பதிவை செய்து, உரிமத்தை கட்டாயம் பெற வேண்டும்.
தவறுவோர் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, வருகிற 1.10.2019 முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தின் மூலம் எச்சரிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உணவு நிறுவனங்கள், உணவுப் பொருள் விற்பனையகங்களில் நெகிழிப் பைகள் அதிகளவில் பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றன.
தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பொருள்களை தவிர்த்திட வேண்டும். விதிகளை மீறி தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை உணவுப் பாதுகாப்புத் துறை உள்ளிட்டோர் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், நகராட்சி ஆணையர்கள், தொழிலாளர் நலத் துறை அலுவலர், ஊராட்சி உதவி இயக்குநர், துணைப் பதிவாளர்(பாலகம்), துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், ஆவின் மேலாளர், மாவட்ட உணவக உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், வணிகர்கள் சங்கப் பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்பினர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள்
கலந்துகொண்டனர்.