கடலில் மூழ்கி புதுவை இளைஞர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த புதுவை இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
புதுவை முத்தியால்பேட்டை தீரன் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ரெஜில்ராஜ் மகன் சார்லஸ் ஐசக் ராஜ் ( 29).
கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர், வார விடுமுறையான செவ்வாய்க்கிழமை கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தனியார் உணவகத்தில் பணிபுரியும் நண்பரான ஜெபலின்ஜான் (29) என்பவருடன் கோட்டக்குப்பம் அருகேயுள்ள புதுக்குப்பம் கடற்கரைக்குச் சென்றார்.
அங்கு அவர்கள் மது அருந்திய நிலையில், கடலில் குளித்ததாகத் தெரிகிறது.
அப்போது, சார்லஸ் ஐசக்ராஜ் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதைக்கண்ட ஜெபலின்ஜான் அருகேயுள்ள கிராமத்துக்கு ஓடிச் சென்று மீனவர்களை உதவிக்கு அழைத்து வந்தார்.
அப்போது, சார்லஸ் ஐசக்ராஜ் கரையோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.