செஞ்சி அருகே நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி, கால்வாய் போல காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, நாட்டார்மங்கலத்தில் இருந்து காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் அகலூரில் இருந்து தொண்டூர், விழுப்புரம் மாவட்ட எல்லையான பூதேரி கிராமம் வரை இரு வழிச் சாலையாக மாற்றியுள்ளனர்.
அகலூர் ஏரிக்கரை மீது சுமார் அரை கி.மீ. தொலைவுக்கு செல்லும் இந்த சாலை 6 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
கடந்த 13-ஆம் தேதி இந்தப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஏரிக்கரை சாலையில் பள்ளமாக உள்ள 3 இடங்களில் தண்ணீர் பெருமளவில் தேங்கி, கால்வாய் போல காட்சியளிக்கிறது.
சாலையோரம் சிறிய குழாய் இருந்தும் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமமடைகின்றனர். ஆகவே, சாலையில் பள்ளமான பகுதிகளை உயர்த்தி சீரமைக்க அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.